“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

By Swetha on ஆனி 23, 2026

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து, பலமுறை எச்சரித்தும் கண்ணன் காதலைக் கைவிட மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாரதிராஜா, கண்ணனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து தனது நண்பர்களான வசந்தகுமார், மணிகண்டன் ஆகியோரின் உதவியுடன் கடந்த ஜூன் 11-ஆம் தேதி அவரை ஒரு தோட்டத்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

அங்கு பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்களான ருத்தீஷ், நசீர் உசேன் ஆகியோர் சேர்ந்து, தங்கையைக் காதலித்தது குறித்து கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். உறவை கைவிட கண்ணன் மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவர்கள் கண்ணனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, கொலையை மறைப்பதற்காக அவரது உடலை அருகில் இருந்த ஒரு தோட்டக் கிணற்றில் வீசிவிட்டு அனைவரும் தப்பியோடினர்.

   

கடந்த ஜூன் 13-ஆம் தேதி மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிணற்றில் கண்ணனின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கண்ணன் கடைசியாகச் சென்ற நண்பர்களைக் கொண்டு கொலையின் பின்னணி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய பாரதிராஜா, ருத்தீஷ், வசந்தகுமார் மற்றும் நசீர் உசேன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மணிகண்டனைத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.