திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தப்பட்டது. வழக்கமாக அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இலவசமாகத் தேநீர் மற்றும் திண்பண்டங்கள் வழங்கப்படுவதால், அவர்கள் அந்த குறிப்பிட்ட கடையில் பேருந்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் கடையில் ஒரு தேநீரின் விலை 25 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சந்தை விலையை விட கூடுதல் விலைக்குத் தரமற்ற பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணி ஒருவர், ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் இது குறித்துக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“உங்களுக்கு இலவசமாகத் தேநீர் கிடைக்கிறது என்பதற்காக, பயணிகளைச் சுரண்டும் கடையில் ஏன் பேருந்தை நிறுத்துகிறீர்கள்?” என அந்தப் பயணி கேட்டது ஓட்டுநரையும் நடத்துனரையும் ஆத்திரமடையச் செய்தது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, சக பயணிகள் மற்றும் அந்தப் பயணியின் மனைவி, மகள் முன்னிலையிலேயே ஓட்டுநரும் நடத்துனரும் அவரைச் சரமாரியாகத் தாக்கினர். “அடிக்காதீங்க அண்ணா… அடிக்காதீங்க” என்று அந்தச் சிறுமியும் அவரது தாயாரும் கதறி அழுதும், ஆவேசமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் எவ்வித மனிதாபிமானமுமின்றித் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர்.
இந்தக் கொடூரமான தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு ஊழியர்களே, நியாயம் கேட்ட பயணியைக் குடும்பத்தினர் முன்னிலையில் தாக்கியது கண்டிக்கத்தக்கது எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் சுயநலத்திற்காகப் பயணிகளின் பணம் மற்றும் மரியாதையைப் பணையம் வைக்கும் இத்தகைய போக்குக் கண்டிக்கத்தக்கது. வன்முறையில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது போக்குவரத்துத் துறை உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
