கோவையில் வசித்து வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 32 வயதுப் பெண் ஒருவர், திருமணத் தகவல் இணையதளம் மூலம் அறிமுகமான நபரால் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவரை இழந்து இரண்டு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, சென்னையைச் சேர்ந்த ஒரு நபர் பழகியுள்ளார்.
தொழிலுக்காகப் பணம் தேவை எனக்கூறி அந்தப் பெண்ணிடமிருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2.5 சவரன் தங்க நகைகளைப் பறித்ததோடு, அவரைப் பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். தனது செயலுக்குப் பின் அப்பெண்ணைத் தவிர்க்கத் தொடங்கிய அந்த நபர் குறித்து விசாரித்தபோது, அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் பல பெண்களை இதேபோல் ஏமாற்றியிருப்பதும் அம்பலமானது.
பணத்தைத் திரும்பக் கேட்டபோது அப்பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை அடுத்து, மோசடியில் ஈடுபட்ட நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
