கிருமாம்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண் (22) ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக, இந்த இளம் பெண்ணுக்கும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என பேசி வைத்திருந்த நிலையில், மணிகண்டன் வேலை காரணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அவ்வப்போது தொலைபேசியில் பேசி வந்த போது, “திருமண செய்ய வேண்டுமென்றால், உங்கள் வீட்டில் எவ்வளவு நகை போடுவார்கள்?” என்று மணிகண்டன் அப்பெண்ணிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மணிகண்டனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. பின் கடந்த திங்கட்கிழமை திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, தன்னை மணிகண்டன் ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இளம் பெண்ணின் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்ய நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் விஷயம் கேள்விப்பட்ட மணிகண்டன், தலைமறைவாகிவிட்டார். எனவே இன்று நடைபெற இருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
