அதிமுகவில் உள்கட்சிப் பிரச்னைகள் காரணமாக கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு மீண்டும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிமுகவின் புதிய துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வேலுமணியுடன் சேர்த்து கட்சியின் மூத்த நிர்வாகிகளான தங்கமணி, கருப்பணன், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன், காமராஜ், கே.சி. வீரமணி உள்ளிட்ட பலருக்குக் கட்சியின் அமைப்புச் செயலாளர் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம். மணிகண்டன் உள்ளிட்டோர் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு மாவட்டங்களுக்கும் புதிய செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல்களால் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இரு வேறு அணிகளாகச் செயல்பட்டு வந்த சூழலில், வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். தற்போது தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிவிட்டதாக எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ள நிலையில், கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி மறுசீரமைப்பு மற்றும் புதிய பதவிகள் வழங்கும் படலம் அரங்கேறியுள்ளது.
