பெங்களூரு செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள பிரபல உணவகமான ‘ட்ரஃபிள்ஸ்’ கிளையில், உணவு வலைப்பதிவர்கள் இருவருடன் ஏற்பட்ட மோதல் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உணவகத்திற்கு வந்த வ்லாகர்கள் தங்களுக்கு பரிமாறப்பட்ட உணவை காணொளி எடுத்தபோது, அங்கிருந்த மேலாளர் ஒருவர் அதைத் தடுத்து நிறுத்தியுள்ளார். “இது பொது இடம் அல்ல, இங்கு வீடியோ எடுக்க அனுமதி இல்லை” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வ்லாகர்கள் உணவகத்தை விட்டு வெளியேறி சாலையோரத்தில் வீடியோ பதிவு செய்தபோதும், அந்த ஊழியர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து மொபைல் போனைப் பறித்து அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் உணவகத்தின் இந்த மோசமான அணுகுமுறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
https://www.instagram.com/p/Da2r_nDplLI/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, ‘ட்ரஃபிள்ஸ்’ உணவக நிர்வாகம் அதிகாரப்பூர்வ மன்னிப்புக் கோரியுள்ளது. இந்தச் சம்பவம் தங்களின் நிறுவன மாண்புகளுக்கு எதிரானது என்றும், வாடிக்கையாளர்களிடம் இத்தகைய நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட உள்விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஊழியர் பணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, ஊழியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்றும் அந்த உணவக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
