திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கிராமத்தில், 16 வயது பள்ளி மாணவி மோவிதாவின் மர்ம மரணமும், அவரது உடல் நள்ளிரவோடு நள்ளிரவாக எரிக்கப்பட்ட சம்பவமும் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மோவிதா, கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடியபோது, வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்து கொட்டகையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மகளின் உடலைப் பார்த்துப் பெற்றோர் கதறியழுத இந்த சோக நிகழ்வு, அடுத்தடுத்து அரங்கேறிய சில அதிர்ச்சியூட்டும் நகர்வுகளால் பெரும் மர்மமாக உருவெடுத்துள்ளது.
பொதுவாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் காவல்துறைக்குத் தகவல் தெரிவிப்பதே சட்டபூர்வமான நடைமுறையாகும். ஆனால், மோவிதாவின் பெற்றோரும் உறவினர்களும் அம்பலூர் போலீசாருக்கு எவ்வித தகவலும் அளிக்காமல், நள்ளிரவோடு நள்ளிரவாக மாணவியின் உடலை மீட்டுத் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்திற்கு எடுத்துச் சென்று அவசர அவசரமாகத் தீயிட்டு எரித்துள்ளனர். விடிந்ததும் இந்த விவகாரம் கிராம மக்களுக்குத் தெரியவர, தும்பேரி கிராம நிர்வாக அலுவலர் (VAO) காசிநாதன் உடனடியாக அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சாம்பலாகிக் கிடந்த இடத்தை ஆய்வு செய்து, மாணவியின் தந்தை கோவிந்தசாமி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெற்ற மகளின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குக் கூட உட்படுத்தாமல், போலீசுக்குத் தெரியாமல் அவசர அவசரமாக நள்ளிரவில் எரிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி இப்பகுதியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு ஆதாரங்களை அழிப்பதற்காக உடல் எரிக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், தனிப்படை போலீசார் மாணவியின் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடமும், குடும்பப் பின்னணி மற்றும் உறவினர்கள் வட்டாரத்திலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த மர்ம மரணத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொண்டு வர அம்பலூர் போலீசார் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
