உடற்பயிற்சி நிலைய (Gym) உரிமையாளர் ஒருவர், ஒரு இளம் பெண்ணை அவருடைய வீட்டிலிருந்தே வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததால், அங்கிருந்த பெண்கள் பயந்துபோய் கதவை மூடிக் கொண்டுள்ளனர். அந்தப் பெண் பயத்தில் அலறித் துடித்தும், அவளுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. அங்கிருந்த சிலர் இந்த கொடூரத்தை தடுத்து நிறுத்தாமல், தங்களின் கைபேசிகளில் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்துள்ளனர்.
இருப்பினும், வீடியோ எடுத்துக்கொண்டிருந்த பெண்கள், “நீ என்ன செய்தாலும் அது இந்த போனில் பதிவாகிறது, நாங்கள் உடனடியாக போலீசாருக்கு போன் செய்கிறோம்” என்று தைரியமாக எச்சரித்தனர். இதைக் கேட்டு பயந்துபோன அந்த நபர், அந்தப் பெண்ணை விடுத்து உடனடியாக அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான். சொந்த வீட்டிலேயே அந்தப் பெண்ணுக்கு இந்த நிலை என்றால், அவள் அந்த உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்றிருந்தால் அந்த மிருகம் அவளை என்ன பாடுபடுத்தியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.
பெண்களைப் போற்றிப் பாதுகாத்து, அவர்கள் வாழ்வில் முன்னேற நாம் துணையாக நிற்க வேண்டிய இந்த காலகட்டத்தில், இப்படிப்பட்ட சமூக விரோதிகள் பெண்களுக்கு எதிராக மிகக் கேவலமான முறையில் நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. சமூகத்தில் சட்டம் ஒழுங்கை மதிக்காமல், பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற மிருகத்தனமான நபர்கள் மீது காவல்துறை மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
