துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் இயக்குனர் சின்னசாமி இயக்கத்தில் நவரச நாயகன் மகன் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்து வரும் படம் செங்குளம். இந்த படத்தின் பட்ஜெட் 6 கோடி ரூபாய் என முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு நடந்தது. ஆனால் படப்பிடிப்பு துவங்கிய 8 நாட்களிலேயே 2 கோடி ரூபாய் செலவாகி விட்டது.
மீண்டும் பணம் கேட்டு தயாரிப்பாளரை அணுகிய போது 8 நாட்களில் 2 கோடி ரூபாய் செலவான நிலையில் மொத்த படப்பிடிப்பை மீதி 4 கோடி ரூபாயில் எப்படி முடிப்பீர்கள் என்று பணம் தர மறுத்துவிட்டார். எனினும் படக்குழு கேட்டு பணம் பெற்று படப்பிடிப்பை திருநெல்வேலியில் சில நாட்கள் நடத்தியது. ஆனால் அதன்பிறகு கைவசம் பணம் இல்லாததால் படப்பிடிப்பை தொடர முடியவில்லை.
பல நாட்களாக செங்குளம் படப்பிடிப்பு தடைபட்டு பாதியில் நின்று விட்டது. இந்த படத்தில் ஒரு வித்யாசமான கெட்டப்பில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்து வரும் நிலையில், இந்த படப்பிடிப்பு தொடராமல் அப்படியே நின்று விட்டதால் தனது மற்ற படங்களில் நடிக்க முடியாமல் தவிக்கிறார். இதனால் ஏற்கனவே கமிட் ஆன படங்களும் இதனால் கைநழுவும் நிலை ஏற்பட்டுள்ளது.
