“முதல்வரே.. உங்க ஆட்களை கன்ட்ரோல் பண்ணுங்க!” TVK நிர்வாகி செய்த காரியம்.. கொதித்தெழுந்த அதிமுக..!!

By Muthu Mani on வைகாசி 22, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் வாசுதேவி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு நடத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு அரசுப் பொறுப்பிலும் இல்லாத தவெக மருத்துவ அணியினர், எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனையில் நுழைந்து ஆய்வு நடத்தலாம் என ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு தரப்பும் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பி, தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

இச்சம்பவம் குறித்து அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் பிஆர் ஸ்டண்ட் (PR Stunt) நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கட்சியின் மருத்துவ அணி என்ற பெயரில், வெள்ளை கோட் மாட்டிக்கொண்டு மருத்துவமனைகளுக்குச் சென்று அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் பணி செய்ய விடாமல் இந்த கும்பல் மிரட்டி வருகிறது. முந்தைய திமுக அரசால் மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் மருத்துவர்களை, தங்களின் சோஷியல் மீடியா ரீல்ஸ் கன்டென்ட்டிற்காகத் தொந்தரவு செய்வது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வு நடத்த வேண்டுமானால் அதைத் துறை அமைச்சரோ அல்லது அதிகாரிகளுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினரோ செய்யட்டும் என்றும், நோயாளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சினிமா படம் போல டாக்டர் வேஷம் போடுபவர்களைத் தவெக தலைமை அடக்கி வைக்க வேண்டும் என்றும் அதிமுக பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

   

அதேபோல், திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தவெக சார்பில் ஆய்வு நடத்திய இந்தப் பெண், அமைச்சரோ அல்லது சட்டமன்ற உறுப்பினரோ கிடையாது. எவ்வித அரசு பொறுப்புகளிலும் இல்லாத இவர் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார்? இவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ஜோசப் விஜய், தன் கட்சி உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதி தந்துள்ளாரா? இனி எதிர்கட்சியினரும் இது போன்ற ஆய்வுகளைச் செய்யலாமா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

   

இந்தச் சர்ச்சையில் சிக்கியுள்ள தவெக மருத்துவ அணி நிர்வாகி வாசுதேவி, ஏற்கனவே ‘கரூர் துயரம்’ தொடர்பான வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. கரூரில் 41 பேர் பலியானது தொடர்பாக அவதூறு பரப்பியதாக இவர் மீது முன்பே காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் பொருட்டு, அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று, தற்போது தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வரும் நிலையில், இந்த அரசு மருத்துவமனை ஆய்வுச் சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.