பல் மருத்துவ உலகில் மாபெரும் புரட்சியாக, விழுந்த பற்களை மீண்டும் இயற்கையாகவே முளைக்க வைக்கும் ‘TRG-035’ என்ற புதிய மருந்தின் உலகின் முதலாவது மனித மருத்துவப் பரிசோதனையை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர். கியோட்டோ பல்கலைக்கழக மருத்துவமனையில் துவங்கியுள்ள இந்த அதிரடிப் பரிசோதனை, பற்கள் விழுந்த இடத்தில் பொருத்தப்படும் தற்காலிக செயற்கை பற்கள் மற்றும் விலை உயர்ந்த இம்ப்ளான்ட் (Implants) சிகிச்சைகளுக்கு ஒரு நிரந்தர மற்றும் இயற்கை மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதர்களுக்குப் பற்கள் மீண்டும் வளர்வதைத் தடுக்கும் குறிப்பிட்ட புரதத்தின் செயல்பாட்டை இந்த மருந்து முடக்குவதன் மூலம், புதிய பற்கள் இயற்கையாகவே முளைக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர். தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் இந்த மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிகின்ற பட்சத்தில், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த அதிசய மருந்து உலக சந்தைக்கு விற்பனைக்கு வரும் எனப் பல் மருத்துவ நிபுணர்கள் பெரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
