ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், அவரது சொந்த ஊரான மஷாத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா புனிதத்தலத்தில் நேற்று (ஜூலை 10) பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவரது மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும் 14 மாத பேத்தியும் உயிரிழந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய தீவிர போர்ச் சூழல் காரணமாக இத்தனை நாட்களாக அவரது இறுதிச் சடங்குகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது போர் சற்று தணிந்த நிலையில் ஈரான் அரசு இந்த இறுதி நிகழ்வுகளை முன்னெடுத்தது.
ஈரானிய மத வழக்கப்படி பல நாட்கள் நடைபெறும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகள் டெஹ்ரான் மற்றும் கியோம் ஆகிய நகரங்களில் தொடங்கி, இறுதி நாளான நேற்று மஷாத் நகரில் நிறைவடைந்தது. அங்குள்ள ‘கிராண்ட் மொசல்லா’ மசூதி வளாகத்தின் திறந்தவெளி மேடையில் கமேனியின் உடல் பொதுமக்கள் மற்றும் சர்வதேச தலைவர்களின் அஞ்சலிக்காக சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. கமேனியின் மூத்த மகனான ஹொஜ்ஜதுலிஸ்லாம் சையத் முஸ்தபா ஹொஸைனி கமெனி இறுதித் தொழுகையை முன்னின்று வழிநடத்தினார். அதனைத் தொடர்ந்து மாலையில் அவரது உடல் தர்கா வளாகத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டது.
அலி கமேனியின் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் உலகெங்கிலும் உள்ள சுமார் 100 நாடுகளின் தூதர்களும் பிரதிநிதிகளும் நேரில் பங்கேற்று தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் மாநில ஆளுநர் அடா ஹஸ்னைன் ஆகியோர் நேரில் சென்று கமேனியின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இக்கட்டான இந்தச் சூழலில் இந்தியா காட்டிய இந்த ராஜதந்திர மரியாதைக்கு ஈரான் அரசு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
ஆறு நாட்கள் நீடித்த இந்த இறுதிச் சடங்கின் இறுதி ஊர்வலம் மஷாத் நகரின் இமாம் ரெஸா தெருவில் மதியம் 3 மணியளவில் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான ஈரானிய மக்கள் துக்க ஆடைகளுடன் திரண்டு வந்து கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் ஈரான் தேசியக் கொடியுடன், தங்களின் உச்ச தலைவரின் மரணத்திற்குப் பழிவாங்கக் காத்திருப்பதைக் குறிக்கும் ‘சிவப்புக் கொடிகளை’ கைகளில் ஏந்திச் சென்றனர். மேலும், “அமெரிக்காவுக்கு மரணம்” மற்றும் “இஸ்ரேலுக்கு மரணம்” என்ற பழிவாங்கும் கோஷங்கள் வீதியெங்கும் அதிரும் வகையில் முழங்கப்பட்டன.
மறுபுறம், இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே தற்காலிகமாக நிலவி வந்த போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது முற்றிலுமாக முறிவடைந்துள்ளது. கமேனியின் உடலை அடக்கம் செய்துவிட்டு மக்கள் பழிவாங்கும் கோஷங்களுடன் கலைந்து சென்றுள்ள சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றையே உலுக்கிய 2006-ஆம் ஆண்டின் 'நிதாரி தொடர் கொலை வழக்கு' குற்றவாளியான சுரேந்தர் கோலி, ஹரித்வாரில் உயிரிழந்ததாக வெளியான…
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் செப்டம்பர் 16 அன்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து…
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவலாகும். லாகோஸில் உள்ள ஸ்விஃப்ட்-மெட் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்குவரத்து…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட…
வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,…
பூமியிலிருந்து பார்க்கும்போது அமைதியாகக் காட்சியளிக்கும் நிலவில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய விண்வெளி மோதல் நிகழ்ந்துள்ளது. 2024 ஏப்ரல்…