தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று அங்குள்ள தட்டாஞ்சாவடி மார்க்கெட், தவளக்குப்பம் சந்திப்பு மற்றும் கடலூர் சாலை ஆகிய மூன்று முக்கிய இடங்களில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விஜய் புதுச்சேரிக்குள் நுழைந்தது முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது வாகனத்தைச் சுற்றி இருசக்கர வாகனங்களில் ரசிகர்கள் அணிவகுத்துச் சென்றதுடன், சில ஆர்வமிகுந்த ரசிகர்கள் விஜய்யின் கார் மீது ஏறி அவருக்குக் கை காட்ட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களின் இந்த அதீத ஆர்வத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், ஒருவழிப் பாதையில் விதிமுறைகளை மீறிச் சென்ற பல ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய பவுன்சர்கள், காரின் மீது ஏறியவர்களைக் கீழே இறக்கிவிட்டு வழி ஏற்படுத்தினர். இருந்தபோதிலும், தங்களது விருப்பமான நடிகரை அருகில் பார்க்க வேண்டும் என்ற முனைப்பில் ரசிகர்கள் முண்டியடித்தது அந்தப் பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தது.
இந்த நெரிசலுக்கு இடையே, விஜய்யை அருகில் வந்து பார்க்க முயன்ற முதியவர் ஒருவர் வேகமாக ஓடி வந்தார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலர் (பவுன்சர்) ஒருவர் அந்த முதியவரைத் தடுத்துத் தள்ளிவிட்டதில் அவர் நிலைதடுமாறிக் கீழே விழுந்தார். இதனை நேரில் பார்த்த விஜய், உடனடியாகத் தனது பாதுகாவலர் மீது கடும் கோபமடைந்து அவரைக் கண்டித்தார். முதியவர் மீது அக்கறை காட்டிய விஜய்யின் இந்தச் செயல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
