டெல்லியில் வெறும் 400 ரூபாய் கடனுக்காக இளைஞர் ஒருவர் சிறுவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு டெல்லியின் தயால்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது கைப் என்ற இளைஞர், பழைய பொருட்களைச் சேகரிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்களிடம் 400 ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகவும், அதனைத் திருப்பித் தருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கைப் வேலை முடிந்து திரும்பியபோது, அவரை வழிமறித்த மூன்று சிறுவர்கள் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாற, அந்தச் சிறுவர்கள் தங்களது கத்தியால் கைப்பைச் சரமாரியாகக் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட 16 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் ஒன்றின் தாக்கத்தால் தூண்டப்பட்டு இந்தச் செயலில் ஈடுபட்டதாகச் சிறுவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும், தங்களது வீரத்தைக் காட்டுவதற்காக இந்தக் கொலைச் சம்பவத்தை மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது போலீசாரையே அதிர வைத்துள்ளது. கைதானவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு மிகச்சிறிய பணத்துக்காகவும், சினிமா மோகத்தினாலும் சிறுவர்கள் இத்தகைய கொலையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
