தமிழகத்தில் சம வேலைக்குச் சம ஊதியம் கோரித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் போது, அவர்களைத் தன்னிச்சையாகப் பணியில் சேர்க்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. போராட்டத்தை முடித்துவிட்டு வரும் ஆசிரியர்களை மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) முறையான அனுமதியின்றி மீண்டும் பணியில் அமர்த்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை மீறி வட்டாரக் கல்வி அலுவலர்களோ அல்லது பள்ளித் தலைமை ஆசிரியர்களோ ஆசிரியர்களைப் பணியில் சேர்த்தால், அவர்கள் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் கடந்த 26 நாட்களாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில், இந்தப் புதிய உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும், கல்வித்துறையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒருபுறம் ஆசிரியர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட முறையாக வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், மறுபுறம் நிர்வாக ரீதியான கட்டுப்பாடுகளைக் கல்வித்துறை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
