தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமாக உடற்கல்வி இயக்குனர் நிலை இரண்டு நியமனம் வழங்கப்பட்டு வருகின்றது. உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை 2 ஆக பதவி உயர்வு பெற தகுதியானவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து அனுப்ப வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இளநிலையில் இரட்டை பட்டப்படிப்பு படித்தவர்களின் பெயரை சேர்க்கக்கூடாது. பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதாவது உள்ளதா என்பதை ஆராய வேண்டும். விதிமுறைகளுக்கு முரணாக பெயர் சேர்க்க பரிந்துரை செய்தால் அல்லது பெயர் விடுபட்டதாக தெரிவித்து முறையீடு ஏதாவது பிறகு பெறப்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முழு பொறுப்பை ஏற்க நேரிடும். எனவே இந்த விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
