தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. கரூர் சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கவும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் விஜயுடன் பாஜக கூட்டணி வைப்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாங்கள் விஜய்க்கு ஆதரவாக இருக்கிறோம் என கூறுவதை விட மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்பதே உண்மை. விஜயுடன் கூட்டணி வைக்கலாம், வைக்காமல் கூட போகலாம். ஆனால் நாங்கள் கூட்டாக அரசை எதிர்ப்போம், இது கூட்டணியாகுமா என்பதை வரும் காலங்களில் பார்க்கலாம் என சூசகமாக பதிலளித்து சென்றார்.
