தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2 எம்எல்ஏ-க்களின் ஆதரவை நாடியுள்ளது. இது ஒருபுறமிருக்க, அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை முன்வைத்து டிடிவி தினகரன் ‘குதிரை பேரம்’ மற்றும் ‘போலி கையெழுத்து’ புகார்களை எழுப்பியுள்ளதால், தவெக தரப்பு பெரும் அரசியல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்கள் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டாலும், மோசடி புகார்கள் எழுந்துள்ளதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக விஜயை ஆட்சி அமைக்க அழைக்கமாட்டார் என்றே தெரிகிறது. குறிப்பாக, கடிதங்களில் உள்ள கையெழுத்துகளின் உண்மைத்தன்மையை (Verification) முழுமையாக ஆய்வு செய்த பிறகே அடுத்தகட்ட முடிவை எடுக்க ஆளுநர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சரிபார்ப்பு பணிகளுக்குச் சில நாட்கள் ஆகலாம் என்பதால், தவெகவின் ஆட்சி கனவு தற்காலிகமாகத் தாமதப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இக்கட்டான இந்தச் சூழலில், ஆளுநர் இன்று மாலை கேரளாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பது தமிழக அரசியலில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்தப் பயணம் தற்செயலானதா அல்லது திட்டமிட்ட காலதாமதமா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. ஆளுநர் இல்லாத நிலையில், ஆட்சி அமைப்பு தொடர்பான கோப்புகள் கிடப்பில் போடப்படலாம் என்பதால், தவெக தலைமை பெரும் தவிப்பில் ஆழ்ந்துள்ளது. 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில், ஆளுநரின் இந்த நகர்வு விஜய்க்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம், கட்சித் தலைவர் விஜய் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் நிர்வாகிகளை அனுப்பி வைப்பது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமமுகவின் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை தவெக தரப்பிலிருந்து முறையான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை. ஒருபுறம் ஆளுநரின் சரிபார்ப்பு நடைமுறை, மறுபுறம் கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி என இருமுனைத் தாக்குதல்களைச் சந்தித்து வரும் விஜய், இந்தச் சிக்கல்களைக் கடந்து தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
