தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் எதுவும் வழங்கப்படவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.
இப்படியான நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரொக்கப்படும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 3000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நிதி ஆதாரங்களை திரட்ட அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக அதிக லாபத்தில் இயங்கும் துறைகளிடம் கூடுதல் நிதி தரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் கடைசி வாரத்தில் பொங்கல் பணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
