சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கு மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அளிக்கப்பட்டு வந்த 100% சாலை வரி விலக்கை மேலும் இரண்டு வருடங்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழகத்தில் மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வரை சாலை வரியில் முழு விலக்கு அளிக்கப்படும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டில் மின்வாகன கொள்கையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை 2025 ஆம் ஆண்டு வரை மீண்டும் தமிழக அரசு நீட்டித்திருந்தது.
இந்த சலுகை கடந்த டிசம்பர் 31ஆம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் 2026 ஜனவரி 1 முதல் 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை மீண்டும் நீட்டித்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் மின்வாகன பயன்பாடு 2025 ஆம் ஆண்டில் 7.8 சதவீதத்தை எட்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது. எனவே பேட்டரியால் இயங்கும் போக்குவரத்து அல்லது பிற வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகின்றது. இதனால் மின்பாகனங்களின் விலை குறையும் என்பதால் வாங்குபவர்கள் பயனடைவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
