தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர்.
சென்னையில் இரண்டு நாட்கள் முகாமிடும் இக்குழுவினர், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், காவல்துறை பொறுப்பு டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு, வாக்குச்சாவடி வசதிகள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த உயர்மட்டக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
