தேர்தல் களத்தில் பணப்புழக்கத்தைத் தடுக்கும் வகையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், குறிப்பாகத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ‘ஆன்லைன்’ பணப்பரிமாற்றங்களைக் கண்காணிக்க மட்டும் பிரத்யேகமாக 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதே வேளையில், சோதனைச் சாவடிகளில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி அந்தப் பணத்தை உடனடியாகத் திருப்பி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
