![elangovan - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/elangovan.jpg)
CINEMA
சுவாமி, பிராணநாதா என பேசிக் கொண்டிருந்த தமிழ் சினிமா… மடைமாற்றிய கதாசிரியர்… அண்ணா, கலைஞருக்கு முன்னோடியாக விளங்கிய இளங்கோவன்!
தமிழ் சினிமா பேச ஆரம்பித்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகளை நெருங்கப் போகிறது. இதில் பத்தாண்டுகளுக்கு ஒரு மாற்றம் என பல மாற்றங்களைக் கண்டு இன்றிருக்கும் நவீன வடிவத்துக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமா தோன்றிய ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலும் புராண இதிகாச கதைகளையே படமாக்கினார்கள்.
அதனால் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களும் அந்த காலத்தையதைப் போன்றே இருந்தன. உதாரணத்துக்கு காதலனும் காதலியும் சந்தித்துக் கொள்கிறார்கள் என்றால் காதலி காதலனைப் பார்த்து “சுவாமி, பிராணநாதா” எனதான் அழைப்பார். இப்படி காதலர்களுக்குள் பிணைப்பில்லாத வசனங்களாக இருக்கும்.
இதை அடியோடு மாற்றியவர் யார் என்றால் கதாசிரியர் இளங்கோவன்தான். சிறந்த தமிழறிஞரான இவர், தமிழ் சினிமாவில் தன் செந்தமிழ் வசனங்களால் ஒரு புதிய அலையை உருவாக்கினார். இவர் வசனம் எழுதிய அம்பிகாபதி மற்றும் கண்ணகி போன்ற படங்களின் வசனங்கள் இன்றளவும் நினைவில் கொள்ளத்தக்கவை. அம்பிகாபதி படத்தில் காதல் ரசம் வழியும் வசனங்களை எழுதினார் என்றால் கண்ணகி படத்தில் கண்ணகியின் கோபத்தை வெளிப்படுத்தும் சீற்றமான வசனங்களை எழுதியிருப்பார்.
கண்ணகி படத்தின் இறுதியில் கண்ணாம்பாள் பேசும் வசனம் எல்லாம் இன்றளவும் ரசிக்கும்படி அமைந்திருக்கும். அதே போல அவர் வசனம் எழுதிய ஏழை படும் பாடு திரைப்படத்துக்கும் அற்புதமான வசனங்களைக் கொடுத்திருப்பார் இளங்கோவன். தமிழ் சினிமாவில் அடுக்குமொழி வசனங்களை ரசிகர்கள் கைதட்டி ரசிக்கும் அளவுக்குக் கொடுத்து புகழ் பெற்ற அண்ணா மற்றும் கலைஞர் ஆகிய இருவருக்குக் கூட இளங்கோவன்தான் முன்னோடி என சொல்லலாம்.
இப்படி தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர் இளங்கோவனைப் பற்றி இன்றைய ரசிகர்கள் தெரிந்துகொள்ள எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. அவருக்கு என ஒரு விக்கிபீடியா பக்கம் கூட இல்லை. அவரது நல்ல புகைப்படம் ஒன்று கூட இணையத்தில் தேடினால் கிடைக்காது. அது இந்த கால தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பேரிழப்புதான்.