தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா ஆகிய இருவரும் முதல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தனர். அவர்களுக்குப் பிறகு எம் ஜி ஆர், சிவாஜி என்ற அடுத்த சூப்பர் ஸ்டார்கள் உருவாகினர். ஆனால் இவர்கள் இரண்டு தலைமுறைக்கு நடுவே சைலண்ட் சூப்பர் ஸ்டாராக மிக சொற்ப காலமே ஜொலித்தவர் டி ஆர் மகாலிங்கம்.
இவர் தென்கரை என்ற கிராமத்தில் கட்டுப்பெட்டித் தனமான ஒரு பார்ப்பன அக்ரஹாரத்தில் பிறந்தார். குடும்ப வழக்கப்படி இவரும் பாடல்கள் கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக பாடியுள்ளார். அதனால் இவர் புகழ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அவரை படத்தில் நடிக்க வைக்க ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்துள்ளார்.
அப்படிதான் அவர் நந்தகுமார் மற்றும் பிரகலாதா போன்ற படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி படிப்படியாக பல படங்களில் நடித்த அவர் பாகவதருக்குப் பின்னர் தமிழ்நாடே கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக ஆனார். இதற்கிடையில் ஏவிஎம் நிறுவனம் ஸ்ரீவள்ளி என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்கும் முடிவில் இருந்துள்ளது.
அந்த படம் முருகனைப் பற்றிய படமாக உருவாக இருந்ததை அறிந்த டி ஆர் மகாலிங்கம் தானாக விரும்பிச் சென்று ஏவிஎம் செட்டியாரிடம் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். அவர்கள் உறுதியாக எந்த பதிலும் சொல்லாத நிலையில் ‘எனக்கு சம்பளமாக ஒரு ரூபாய் கொடுத்தாலும் பரவாயில்லை’ என்று சொல்லியுள்ளார்.
அதைக் கேட்ட ஏவிஎம் நிறுவனம் அவருக்கு 3000 ரூபாய் சம்பளம் தந்து அமர்த்திக் கொண்டதாம். ஆனால் ஸ்ரீவள்ளி படம் முடியும் வரை வேறு படத்தில் ஒப்பந்தம் ஆகக் கூடாது என நிபந்தனை விதித்ததாம். அதை டி ஆர் மகாலிங்கமும் ஏற்றுக்கொள்ள படம் 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் உருவாகி 20 லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்ததாம். டி ஆர் மகாலிங்கத்தின் புகழும் உச்சத்துக்கு சென்றுள்ளது.
