தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெற முடியாமல் தவித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக கூட்டணியின் பலம் 113 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீதமுள்ள 5 இடங்களுக்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இத்தகைய அரசியல் சூழலில், அதிமுக ஆட்சி அமைக்க திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்கப் போவதாகச் செய்திகள் பரவின. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இது குறித்துத் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமையுமா என்ற கேள்வி பரவலாக எழுந்தது.
இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நீண்டகாலமாகப் பிரதான எதிரிகளாகச் செயல்பட்டு வருவதால், இவர்களுக்கு இடையே கூட்டணி அமையச் சாத்தியமே இல்லை என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். நேற்று “தலைவர் முடிவுக்குக் கட்டுப்படுவோம்” என்று கூறியிருந்த நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள இந்த அதிரடி கருத்து அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
