தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் ஆங்காங்கே நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினையைக் குறிப்பிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தவெகவை கடுமையாகக் கலாய்த்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அண்மையில் நடந்த தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இந்த விமர்சனம் வந்துள்ளது.
ஜெயக்குமார் தனது பதிவில், “தொடர் மின்வெட்டு காரணமாக ஒரு கூட்டம் திரண்டு எம்.எல்.ஏ வீட்டிற்குச் சென்று சத்தம் போட்டுள்ளனர். அப்போது ஒரு நபர் வெளியே வந்து, எம்.எல்.ஏ ஊரில் இல்லை என்று கூறியதும் மக்கள் கலைந்து சென்றுவிட்டனர். ஆனால், வெளியே வந்து பொய் சொல்லிவிட்டுச் சென்றவர்தான் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ என்பது அங்கிருந்த மக்களுக்குத் தெரியவில்லை; வேட்பாளரின் முகத்தைப் பார்த்து ஓட்டுப் போட்டிருந்தால் தானே தெரிந்திருக்கும், பாவம்!” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்றிருந்தாலும், பல தொகுதிகளில் மக்கள் வேட்பாளர்களின் விபரங்களோ அல்லது பெயரோ தெரியாமல், விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மட்டுமே வாக்களித்தனர் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. ராயபுரம் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்த ஜெயக்குமார், தவெகவினர் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் என்றும், மக்கள் வேட்பாளர்களை அடையாளம் தெரியாமல் வாக்களித்துவிட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டும் விதமாகவே இந்த நையாண்டிப் பதிவை வெளியிட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
