உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா, கடந்த 2013-ம் ஆண்டு சண்டிகரில் படித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விடுதியின் 4-வது மாடியிலிருந்து விழுந்து கோமா நிலைக்குச் சென்றார். கடந்த 13 ஆண்டுகளாக அசைவற்ற நிலையில் இருந்த மகனை அவரது வயதான பெற்றோர் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தனர். எனினும், காலப்போக்கில் போதிய மருத்துவ வசதி இல்லாமலும், மகனின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததாலும் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். மகனின் வலியை இனியும் பார்க்க விரும்பாத பெற்றோர், அவருக்குக் ‘கருணைக்கொலை’ செய்ய அனுமதி கோரி நீதிமன்றக் கதவுகளைத் தட்டினர்.
ஆரம்பத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், ஹரிஷ் ராணாவின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கினை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் அளித்த அறிக்கையில், ஹரிஷ் ராணா மீண்டும் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் இந்தத் தெளிவான அறிக்கை, வழக்கின் போக்கை மாற்றியது.
நேற்று (11.03.2026) இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. ராணாவிற்கு வழங்கப்பட்டு வரும் செயற்கை உணவு மற்றும் நீர் ஆகிய வாழ்வாதார உதவிகளை நிறுத்திக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் நேரடி கண்காணிப்பில் இந்த நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. செயற்கை சுவாசம் இன்றி தானாக சுவாசிப்பவர்களுக்கு இந்தியாவில் கருணைக்கொலை வழங்கப்படுவது மிக அரிதான ஒன்று என்றாலும், ராணாவின் நிலையை கருத்தில் கொண்டு இந்த ‘Passive Euthanasia’ முறைக்கு நீதிமன்றம் வழிவகை செய்தது.
இந்த உணர்ச்சிகரமான தீர்ப்பை வழங்கிய பிறகு, அறையில் ஒரு கனத்த அமைதி நிலவியது. தீர்ப்பு வழங்கிய கையோடு இருக்கையை விட்டு எழுந்த நீதிபதி ஜே.பி. பர்திவாலா, ஒரு தந்தையாகவும் மனிதனாகவும் அந்தத் துயரத்தைச் சுமக்க முடியாமல் அங்கேயே அழுதுள்ளார். சட்டத்திற்கும் அப்பாற்பட்ட மனிதநேயமும், ஒரு பெற்றோரின் 13 ஆண்டுகால வேதனையும் கலந்த இந்த வழக்கு, இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் உருக்கமான ஒரு நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.
