சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று காவேரி மருத்துவமனையில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மீடியா கேமராக்களை பார்த்தாலே பயமாக உள்ளது. அதுவும் தேர்தல் நேரம், மூச்சு விட கூட பயமாக தான் உள்ளது என கிண்டலாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் புகழ்பெற்ற மருத்துவமனைகளுள் ஒன்றான காவேரி மருத்துவமனை, தற்போது புதிதாக வடபழனியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றை கட்டி இருக்கிறது. அதிநவீன சிகிச்சை அளிக்கும் வசதிகளுடன் கூடிய அந்த மருத்துவமனையில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அந்த மருத்துவமனை அமைந்துள்ள இடம்பற்றி பேசிய ரஜினிகாந்த், முன்பு ஏவிஎம் ஸ்டூடியோவில் சினிமா படப்பிடிப்புகள் நடக்கும் போது இங்கு வந்து தான் பேட்ச் ஒர்க் நடத்துவார்கள். அதன்பின்னர் ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதைப்படி 80 சதவீத படப்பிடிப்பு ஒரு வீட்டின் உள்ளேயே நடக்கும்படி உள்ளது என்பதால், இந்த காலி இடத்தில் ஒரு வீட்டையே கட்டி அதில் படப்பிடிப்பு நடத்தலாம் என முடிவெடுத்து ஒரு வீட்டை கட்டினார்கள்.
அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. கிட்டத்தட்ட போட்ட காசை விட 200 மடங்கு வசூல் கிடைத்தது. இதனால் அதன் ஷூட்டிங்கிற்காக கட்டிய அந்த வீடு ராசியான வீடாக கருதி எந்த படம் எடுத்தாலும் அங்கு ஒன்றிரண்டு சீன்களை எடுப்பார்கள். அந்த படங்களும் ஹிட் ஆகிவிடும். என்னுடைய படங்கள் கூட இங்கு படமாக்கி இருக்கிறோம். அப்படி ஒரு ராசியான இடத்தில் தான் தற்போது இந்த காவேரி மருத்துவமனையை கட்டி இருக்கிறார்கள் என ரஜினி கூறினார்.
முன்பெல்லாம் காவேரி மருத்துவமனை எங்க இருக்கிறது என்றால் கமல்ஹாசன் வீட்டுக்கு அருகில் இருக்கு என சொல்வார்கள். ஆனால் தற்போது கமல்ஹாசன் வீடு எங்க இருக்கு என கேட்டால் காவேரி மருத்துவமனை அருகில் இருக்கு என சொல்லும் அளவுக்கு அம்மருத்துவமனை வளர்ச்சி அடைந்திருக்கிறது. கமல்ஹாசன் இதை தப்பா நினைத்துக்கொள்ள கூடாது. நான் சும்மா ஜாலிக்காக சொல்கிறேன். கமல்ஹாசனை கலாட்டா பண்ணேன்னு தப்பா எழுதிவிடாதீர்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த உடனே என் எதிரே இத்தனை கேமராக்கள் பார்த்ததுமே எனக்கு பயம் வந்துடுச்சு. இப்போ எலெக்ஷன் டைம் வேற, மூச்சு விடவே பயமா இருக்கு. தற்போதைய காலகட்டத்தில் யாருக்கு எந்த வியாதி வரும் என தெரியாது. ஏனென்றால் எல்லாமே கலப்படம் ஆகிவிட்டது. காத்து, தண்ணி, பூமி என எல்லாத்துலையும் கலப்படமா இருக்கு. பச்சிளம் குழந்தைகள் சாப்பிடும் மருந்திலும் கலப்படம் செய்கிறார்கள். இந்த மாதிரி கலப்படம் செய்பவர்களை சாகும் வரை சிறையில் போட வேண்டும் என ரஜினிகாந்த் பேசினார்.