2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் வேட்பாளர் தேர்வு மற்றும் விருப்பமனு தாக்கல் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமாக ராஜேஷ்குமார், நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் ராஜேஷ்குமார் எம்.பி.யாக இருந்து கொண்டே எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட ஆர்வம் காட்டி வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ராஜேஷ்குமார் விருப்பமனு தாக்கல் செய்ய வந்தபோது, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் ஒன்றிய, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள் திரளான அளவில் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் ஊர்வலமாக அண்ணா அறிவாலயத்திற்கு வந்த அவர்கள், ராஜேஷ்குமாரே நாமக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தனித்தனியாகவும் விருப்பமனுக்களை அளித்தனர். ஏற்கனவே முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வனும் இந்தத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள நிலையில், நாமக்கல் தொகுதியின் திமுக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
