விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, பெற்றோர் பணிக்குச் செல்வதால் பண்ருட்டி அருகே உள்ள நெல்லிக்குப்பத்தில் தன் பாட்டி வீட்டில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். அப்போது, அதே பள்ளியில் படிக்கும் சக மாணவனுடன் ஏற்பட்ட பழக்கம் நெருக்கமாக மாறியுள்ளது. பாட்டி வேலைக்குச் சென்றுவிடும் நேரத்தில் இருவரும் வீட்டின் தனிமையில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், குடும்பத்தினர் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி 7 மாதக் கர்ப்பமாக இருப்பதை அறிந்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சக பள்ளி மாணவன் மூலம் இந்த நிலை ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அம்மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மாணவன் தலைமறைவாகிவிட்டான். அவனைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள சூழலில், மாணவிக்குத் தேவையான மருத்துவ உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
