ஹைதராபாத் சத்ரிநாக்காவைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவரின் மகள் தேஜஸ்வி (17), இடைநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் நள்ளிரவு வரை செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை ஸ்ரீனிவாஸ், மகளைக் கண்டித்து செல்போனில் பேசவேண்டாம் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
தந்தையின் கண்டிப்பால் மனமுடைந்த தேஜஸ்வி, நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தார். இதைக் கவனித்த அவரது தந்தை உடனே மகளைப் பின் தொடர்ந்து சென்றார். உப்புகுடா பகுதிக்கு வந்தடைந்த தேஜஸ்வி, அங்கு வந்துகொண்டிருந்த அதிவேக சரக்கு ரெயில் முன்பு எதிர்பாராதவிதமாகத் தனது தந்தையின் கண் முன்பே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
மகள் தனது கண்முன்னே ரெயிலில் அடிபட்டு உயிரிழந்ததைக் கண்டு தந்தை ஸ்ரீனிவாஸ் மற்றும் அப்பகுதி மக்கள் பதைபதைத்துப்போய் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த ரெயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
