திருச்சியில் இன்று (மார்ச் 9) நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய பாஜக தலைமையிலான NDA கூட்டணி திட்டமிட்டு தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருவதாகக் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “இவ்வாறு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ஒரு கூட்டணிக்கு எங்களது மாநில மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள்?” என அவர் கேள்வி எழுப்பியதோடு, மாநில உரிமைகளுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதையும் உறுதிப்படக் கூறினார்.
அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்த அவர், திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியாது என்பதை உணர்ந்த பாஜக, அதிமுகவைச் சிறுகச் சிறுக விழுங்கி வருவதாகக் குறிப்பிட்டார். “திமுகவின் நேர் எதிரிகளாக இருந்தாலும், அதிமுகவின் தொண்டர்களுக்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான தனது விமர்சனத்தை முன்வைத்த ஸ்டாலின், அவர் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுவதாகக் கூறினார். சுயநலத்திற்காக அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், கட்சியின் தனித்தன்மையை எடப்பாடி பழனிசாமி இழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
