முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோருடன் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதிக்கு ஒருவாரப் பயணமாகச் சென்று சென்னை திரும்பியுள்ளார். அவர்களுக்கு அடுத்த நாள் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவும் அவர்களுடன் இணைந்துகொண்டார். இவர்கள் எதற்காக கூர்க் சென்றார்கள் என்று மாநில உளவுத்துறையால் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், மத்திய உளவுத்துறையினர் இதுகுறித்த பல ரகசியத் தகவல்களைச் சேகரித்துள்ளனர். கூர்க் பகுதியில் திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸில்தான் ஸ்டாலின் தங்கியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், “தேர்தலுக்காக ஒவ்வொரு அமைச்சரிடமும் குறிப்பிட்டத் தொகை கொடுத்திருந்தும் இந்தத் தோல்வி எப்படி ஏற்பட்டது?” என்று ஸ்டாலின் தனது ஆலோசனையைத் தொடங்கியுள்ளார். அதற்குப் பதில் அளித்த மருமகன் சபரீசன், “ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நம்மை ஏமாற்றியது ஒருபுறம் இருந்தாலும், அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் (மா.செ.) நம்மை ஏமாற்றியதைத்தான் ஜீரணிக்கவே முடியவில்லை” என்று தனது மன ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய உதயநிதி, “அமைச்சர்கள் பலரும் தங்களது சொந்தத் தொகுதியில் தாங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் அக்கறை காட்டினார்களே தவிர, தங்களுக்குப் பொறுப்பு கொடுக்கப்பட்ட தொகுதிகளில் கட்சியை ஜெயிக்க வைக்க முயற்சிக்கவில்லை” என்று கோபத்தோடு கூறியுள்ளார். மேலும், மற்றவர்கள் ஜெயித்தால் நமக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என்ற சுயநல அரசியல் காரணமாக, தேர்தல் பணிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பெரும் தொகையைச் சரியாகச் செலவு செய்யாமல் சுருட்டிக்கொண்டனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இறுதியாக, பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம் யார் யாருக்கு எவ்வளவு தேர்தல் நிதி கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை ஸ்டாலின் கேட்டுள்ளார். அவர் சொன்ன மிகக் கனமான தொகைகளின் விவரங்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்டாலின், பணத்தைச் சரியாகச் செலவு செய்யாமல் ஏமாற்றியதாக யார் யார் மீதெல்லாம் சந்தேகம் இருந்ததோ, அந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு கடுமையாக வறுத்தெடுத்துள்ளார்.
