தமிழக அரசியலில் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டைகளில் ஒன்றாகத் திகழும் திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் தொகுதி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் போர்க்களமாக மாறப்போகிறது. 2001 முதல் இத்தொகுதியைத் தனது ஆளுமைக்குள் வைத்திருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அதிமுக சார்பில் 5-வது முறையாக இங்கு களம் காண்கிறார். தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் விஸ்வநாதனை இம்முறை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற முனைப்பில், திமுக தலைமை ஒரு பலமான “செக்” வைக்கத் தயாராகி வருவதுதான் தற்போதைய அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக்.
நத்தம் தொகுதியின் வெற்றித் தோல்வியைத் தீர்மானிப்பதில் முத்தரையர் சமூக மக்களின் வாக்குகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தச் சமூகச் சூழலைச் சரியாகக் கணித்துள்ள திமுக, இம்முறை தமிழர் தேசம் கட்சியின் தலைவரான செல்வக்குமாரை உதயசூரியன் சின்னத்தில் களம் இறக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் திருச்சியில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி, முத்தரையர் இளைஞர்களிடையே தனக்கிருக்கும் செல்வாக்கை நிரூபித்த செல்வக்குமார், விஸ்வநாதனுக்கு ஈடுகொடுக்கும் ஒரு வலிமையான வேட்பாளராகப் பார்க்கப்படுகிறார்.
வழக்கமாக நத்தம் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கே ஒதுக்கப்படும். ஆனால், இந்த முறை எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பாத முதல்வர் ஸ்டாலின், செல்வாக்குள்ள ஒரு சமூகத் தலைவரையே நேரடியாகக் களமிறக்க முடிவு செய்திருப்பது அதிமுக முகாமிற்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் விஸ்வநாதன் ஒருபுறம், அந்தப் பலமான கோட்டையைத் தகர்க்கத் துடிக்கும் இளம் தலைவர் செல்வக்குமார் மறுபுறம் என நத்தம் தொகுதியில் போட்டி இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
இதுவரை தோல்வியைச் சந்திக்காத நத்தம் விஸ்வநாதன், இம்முறை தனது அரசியல் வாழ்வின் மிகக் கடினமான தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ரத்தத்தின் ரத்தங்களே முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறப் போகும் இந்த “பவர் பிளே” போட்டியில், நத்தம் தொகுதி மக்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கப்போகிறது என்பதும், அதிமுகவின் கோட்டை தகர்க்கப்படுமா என்பதும் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
