திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிகவைச் சேர்ந்த வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹான் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். திமுகவினரின் கடுமையான உழைப்பால் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு, இப்போது தவெகவுடன் கைகோர்த்திருப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்விகளை எழுப்பி, திமுக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில், எழுந்துள்ள விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் முதிர்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மாண்புமிகு அமைச்சர்களாகப் பதவியேற்று இருக்கும் நம் கொள்கைத் தோழமைகள் திரு. வன்னி அரசு, ஷாஜகான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு, புதிய அமைச்சர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசியல் நாகரீகத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.
மேலும், தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் உண்டு என்பதைத் தனது பதிவின் மூலம் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்தியுள்ளார். எனவே, இந்தச் சூழ்நிலையில் கழகத் தோழர்கள் யாரும் கூட்டணிக் கட்சிகளைப் புண்படுத்தும்படி சமூக வலைத்தளங்களிலோ அல்லது வெளியிலோ கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். “இதுதான் உங்கள் தலைவராக என்னுடைய அன்பு வேண்டுகோள்” என்றும் அவர் திமுக தொண்டர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து தனது பதிவில், “நாம் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்தவர்கள். அதனை மறந்துவிடக் கூடாது. நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாம் செயல்படுவோம்” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கசப்புகளைத் தாண்டி, ஜனநாயக நெறிமுறைகளின்படி செயல்பட வேண்டும் என்ற அவருடைய இந்த பெருந்தன்மையான அணுகுமுறையையும், முதிர்ச்சியான அரசியல் நாகரீகத்தையும் தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.
