தமிழ் சினிமாவில் நடிக்க முன்பு போல அழகும், திறமையும், நடிப்பாற்றலும் தேவையே இல்லை. நடிகர், இயக்குநர், அரசியல்வாதி இவர்களில் யாராவது ஒருவரது வாரிசாக இருந்தால் மிக மிக எளிதாக சினிமாவில் நடித்து விடலாம். அல்லது பெரிய தொழிலதிபராக பெட்டி, பெட்டியாக கரன்ஸி கட்டுகளை வைத்திருந்தாலும் எளிதாக நடிகராகி விடலாம். அவருடன் யார் வேண்டுமானாலும் நாயகியாக நடிக்க வருவர். ஏனென்றால் சினிமாவை நிர்வகிப்பது கரன்ஸி தாள் கட்டுக்கள் தானே தவிர, கலை அல்ல. இதுதான் இன்றைய நிஜம்.
அப்படித்தான் இந்தியா முழுவதும் கிளைகளை கொண்ட பரந்துவிரிந்த நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன், இப்போது லெஜண்ட் படத்தில் நடித்த பிறகு லெஜண்ட் சரவணன் என அழைக்கப்படுவர், சினிமா நடிகராக மாறினார். லெஜண்ட் என்ற ஒரே ஒரு படத்தில் நடித்த அவர் அதையே தனது புகழ் பெயராக அடைமொழியாக மாற்றிக்கொண்டார். இப்போது கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமாரை இயக்குநராக வைத்து அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதற்காக துரை செந்தில்குமாருக்கு 3 மடங்கு சம்பளத்தை வாரி தந்திருக்கிறார்.
ஆனால் இவரது கடைக்கு சென்ற சில வாடிக்கையாளர்கள் ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். அது, சரவணா ஸ்டோர்ஸ்சில் காலை முதல் இரவு வரை சுமார் 200 முறை இவர் நடித்த லெஜண்ட் படத்தில் இருந்து ஒரு பாடலை அங்குள்ள டிவிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அங்கு நிற்கவே முடியாத அளவுக்கு அந்த பாட்டும், இசையும், சத்தமும் மனதை உளைச்சலடைய செய்கிறது. அமிர்தமே என்றாலும் அளவுக்கு மீறினால் நஞ்சுதானே. ஆனால் இதை நாள் முழுவதும் திரும்ப திரும்ப கேட்டு அங்குள்ள பணி செய்யும் ஊழியர்களின் நிலையை நினைத்தால், அதுவும் ஆண்டுக்கணக்கில் இது தொடர்ந்தால், காதுகளில் பஞ்சை வைத்து அடைத்தால் கூட அங்கு பணிசெய்ய முடியாத ஒரு நிலைதான்.
வீட்டில் ஒரு சேனலில் திரும்ப திரும்ப வரும் விளம்பரங்களை பார்த்தாலே வேறு சேனலை மாற்றிவிடுகிறோம். ஆனால் ஒரே பாட்டை காலைமுதல் இரவு வரை தினமும் கேட்டு, அதுவும் வாரக்கணக்கில், மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் என்றால், இனியாவது அந்த பாட்டை நிறுத்திவிட்டு சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை அங்குள்ள டிவிகளில் ஒளிபரப்ப லெஜண்ட் சரவணன் முன்வருவாரா? என்ற கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.