அரசு அனுமதி மற்றும் கல்வி நிறுவன விவகாரங்கள் தொடர்பாகத் தான் தெரிவித்த கருத்துக்களை திமுகவினர் விமர்சித்து வருவதற்கு, ஜோஹோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு விரிவான விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கலைவாணி கல்வி மையம் என்ற அமைப்பின் கீழ் தென்காசி மற்றும் தேனியில் தலா ஒரு இலவச NIOS பள்ளியை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தேனியில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவரால் தொடங்கப்பட்ட பள்ளியை, முந்தைய திமுக ஆட்சியில் அதிகாரிகள் தடையின்மைச் சான்றிதழ் (NOC) வழங்க லஞ்சம் கேட்டுத் துன்புறுத்தியதால் தொடர்ந்து நடத்த முடியாமல் போனதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அந்த அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்கவே, அவரது அறக்கட்டளையை ஏற்று அங்கு தங்களின் இலவசப் பள்ளியைத் தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் உள்ள தங்களின் இலவசப் பள்ளியில் புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்காக, புதிய கட்டடங்கள் கட்ட DTCP அமைப்பிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்ததாகவும் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியில் நிலவிய ஊழல் மற்றும் நிர்வாகக் காரணங்களால் நீண்ட நாட்களாகக் காத்திருந்தும் தங்களுக்கு DTCP அனுமதி கிடைக்கவில்லை என்றும், ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு எந்தவிதப் பணமும் கொடுக்காமலேயே அந்த அனுமதி தானாகத் தங்களுக்குக் கிடைத்ததாகவும் அவர் விளக்கியுள்ளார். இந்த நேர்மறையான மாற்றத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பாராட்டிப் பதிவிட்டதற்காகவே, திமுகவினர் தற்போது தன் மீது அரசியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுத்து வருவதாக அவர் சாடியுள்ளார்.
திமுகவினரின் இத்தகைய விமர்சனங்கள் தவெக அரசுக்கு உதவுவதற்காகத் தான் புனைந்த பொய் என்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஸ்ரீதர் வேம்பு, தன் மீதான தனிப்பட்ட இழிவான தாக்குதல்களுக்குத் தான் ஒருபோதும் பணியப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தமிழ் வழிக் கல்வியில் படித்து, ஏழ்மையான பின்னணியில் இருந்து வளர்ந்த தனக்கு திமுகவினரின் சான்றிதழ் தேவையில்லை என்றும், கிராமப்புற மேம்பாட்டிற்காகவும் தொழில்நுட்பத் தன்னிறைவிற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மரணத்திற்கே அஞ்சாத தான் திமுகவின் தாக்குதல்களுக்கு அஞ்சப் போவதில்லை என்றும், விமர்சிப்பவர்கள் தங்களின் மனசாட்சியை ஆராய்ந்து பார்க்க வேண்டும் , திமுகவினரின் தாக்குதல்களை கண்டு அஞ்சமாட்டேன். மரணத்திற்கே அஞ்சாதவன். அப்படி இருக்கையில் திமுகவை கண்டு ஏன் பயப்பட வேண்டும்? அவர்களுக்கு சிறிதளவு மனசாட்சி இருந்தால் கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் எனது நடத்தையை தாக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியுள்ளார்.
