மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் புதிய நடைமுறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, அரசு நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நுகர்வைக் குறைக்கவும், மின்சாரத்தைச் சேமிக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மார்ச் 18 முதல் நடைமுறைக்கு வரும் இந்தத் திட்டத்தின் மூலம், பொதுச் சேவைகளில் இடையூறு ஏற்படாமல் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் சுகாதாரம், துறைமுகம், குடிநீர் விநியோகம் மற்றும் சுங்கத்துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடங்கியுள்ளதால், உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்திற்கு கியூ.ஆர் (QR) குறியீடு மூலம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைக் கையாள தனியார் நிறுவனங்களும் நான்கு நாள் வேலை முறையைப் பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இலங்கை அரசு தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இதே போன்ற எரிபொருள் தட்டுப்பாடு நிலவியதை நினைவுபடுத்தும் வகையில் தற்போதைய சூழல் அமைந்துள்ளதால், மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது. இருப்பினும், மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் தேவைகளைச் சீராகப் பராமரிக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
