இந்த படத்தில் பாடவே மாட்டேன் என ஒதுங்கிய SPB… கட்டாயப்படுத்தி பாடவைத்து தேசிய விருது வாங்கித் தந்த படக்குழு..

By vinoth on பங்குனி 29, 2024

Spread the love

இந்திய சினிமாவில் அதிக பாடல்களை பாடிய பாடகர் என்ற பெருமைக்குரியவர் எஸ் பி பாலசுப்ரமணியன். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ் பி பி சென்னையில் படிக்கும்போது பாடல்கள் பாடுவதில் ஆர்வம கொண்டு அதற்கான வாய்ப்புகளை தேடி வந்தார். அவருக்கு முதலில் பாட வாய்ப்புக் கிடைத்தது தெலுங்கு சினிமாவில்தான்.

1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.

   

எம் ஜி ஆருக்காக ஆயிரம் நிலவே வா பாடலை பாடிய பின்னர் கவனிக்கப்படும் பாடகர் ஆனார். ஆனால் அவர் உச்சத்துக்கு சென்றது இளையராஜாவின் வருகைக்குப் பிறகுதான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடிய பாடகர் என்றால் அது எஸ் பி பிதான்.

   

ஒரு கட்டத்தில் எஸ்.பி.பி தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என ஓய்வில்லாமல் அனைத்து மொழிகளிலும் பாடல்கள் பாடிக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில்தான் 1980 ஆம் ஆண்டு வெளியான சங்கராபரணம் படத்தின் பாடல்கள் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ஆனால் அந்த படத்தில் தன்னால் பாட முடியாது என எஸ் பி பி மறுத்துள்ளார்.

 

காரணம், சங்கீத வித்வான் ஒருவரைப் பற்றிய படத்தில் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ளாத தன்னால் பாட முடியாது என அவர் நினைத்ததுதான். இதனால் கே.வி.மகாதேவன், வேறு ஒருவரை வைத்து பாட வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். ஆனால் அதன் பின்னர் எஸ் பி பி க்கு நான் பயிற்சி அளிக்கிறேன் என இசையமைப்பாளரின் உதவியாளர் சொல்லவே பயிற்சி எடுத்துக் கொண்டு அனைத்துப் பாடல்களையும் அவரையே பாட வைத்துள்ளனர்.

படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான நிலையில் சிறந்த பாடகருக்கான தேசிய விருதும் எஸ் பி பிக்குக் கிடைத்துள்ளது.