தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று (ஏப்ரல் 5) விருதுநகரில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார். குறிப்பாக, தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரனுக்கு வாக்கு சேகரித்தபோது அவர் பகிர்ந்து கொண்ட பழைய நினைவுகள் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தனது உரையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடனான நட்பை நினைவுகூர்ந்த முதல்வர், “விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன், எனது ஆருயிர் நண்பர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் எனது அன்புச் சகோதரி பிரேமலதா ஆகியோரின் மகன். அவருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்குமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டார். விஜயகாந்த் மீதான தனது மதிப்பையும், அவரது குடும்பத்துடனான நெருக்கத்தையும் அவர் மேடையில் பதிவு செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பல ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் தான் பங்கேற்ற சுவாரசியமான நிகழ்வைச் சுட்டிக்காட்டினார். “விஜய பிரபாகரனுக்கு ஓட்டு கேட்கும்போது எனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. விஜயகாந்த் நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ திரைப்படத்தில் நான் கௌரவ வேடத்தில் நடித்திருந்தேன். அதில் விஜயகாந்தை ஆதரித்து ‘ஆற அமர கொஞ்சம் யோசித்து பாரு..’ என்ற பாடலைப் பாடி அவருக்கு வாக்கு கேட்டிருப்பேன். அன்று திரையில் விஜயகாந்துக்காக வாக்கு கேட்ட நான், இன்று நிஜத்தில் அவரது மகனுக்காக நேரில் வந்து வாக்கு கேட்கிறேன்,” என உருக்கமாகப் பேசினார்.
விருதுநகர் தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரன் மற்றும் கூட்டணி வேட்பாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அரசியல் களத்தில் மாற்றங்கள் இருந்தாலும், பழைய நட்புக்கும் உறவுக்கும் மரியாதை அளிக்கும் வகையில் அமைந்த முதல்வரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
