தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக நடித்து அதன் பின்னர் வெண்னிலா கபடிக்குழு படம் மூலமாக பரோட்டா சூரியாக அறியப்பட்டு அதன் பின்னர் காமெடி நடிகராக வளர்ந்து வந்தார் சூரி. இவரது இயற்பெயர் ராமலக்ஷ்மணன் முத்துசாமி என்பதாகும். 1998ல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்தார் சூரி. ஆனால் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் சூரி.
2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சூரி. இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் 50 பரோட்டாக்களை சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு அந்த காமெடி மிகவும் பிரபலமானதால் இவரை பரோட்டா சூரி என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர்.
அதற்குப் பிறகு சுந்தர பாண்டியன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் ஜில்லா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற திரைப்படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். கடந்த ஆண்டு வெளியான விடுதலை பாகம் ஒன்று திரைப்படத்தின் மூலம் வெற்றிமாறன் சூரியை நாயகனாக அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

அதன் பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த ‘கருடன்’ மற்றும் ‘கொட்டுக்காளி’ ஆகிய திரைப்படங்களும் கவனம் பெற அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள். இதையடுத்து அவர் தொடர்ந்து ஹீரோவாக சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சூரி கதாசிரியராகவும் உருவெடுத்துள்ளார்.
சூரி நடித்த கருடன் படத்தின் மூலக்கதைதான் அவர்தான் சொன்னார் என இயக்குனர் துரை செந்தில்குமார் கூறியிருந்தார். அதை அவர் வாழ்க்கையில் சந்தித்த ஒரு சம்பவத்தில் இருந்து எடுத்து சொன்னதாக சொல்லப்படுகிறது. அதுபோல இப்போது அவர் நடிக்கும் மாமன் படத்தின் கதையையும் சூரிதான் சொன்னாராம். மேலும் தன்னுடைய அப்பாவின் பயோபிக்கையும் விரைவில் எடுக்கவுள்ளதாக சூரி அறிவித்துள்ளார். இப்படி வரிசையாக தன்னுடைய படங்களின் கதைகளில் சூரி ஈடுபாடு காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
