மகாராஷ்டிராவின் பிம்ப்ரி-சிஞ்சவாட் பகுதியில் உள்ள தபோடியில், இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் ஒளிந்திருந்த நச்சுத்தன்மையற்ற ‘டிரிங்கெட்’ வகை பாம்பு ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளின் ஹெட்லைட் பகுதியிலிருந்து பாம்பு மெதுவாக வெளியேறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ‘வனவிலங்கு மற்றும் பறவைகள் பாதுகாப்பு சமூக அமைப்பைச் சேர்ந்த பாம்பு மீட்பாளர் ஜெயவர்தன் காம்ப்ளே, அந்த பாம்பை எவ்வித காயமுமின்றி மீட்டார். பின்னர் அது அருகில் உள்ள இயற்கை வாழ்விடத்தில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. இந்த ‘டிரிங்கெட்’ வகை பாம்புகள் இந்தியாவில் பரவலாகக் காணப்படும் நச்சுத்தன்மையற்ற வகையைச் சேர்ந்தவை என்பதால் மனிதர்களுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதில்லை.
https://twitter.com/VaradBhatkhande/status/2084974247122788680/video/1
பொதுவாகக் காடுகள், புல்வெளிகள் மற்றும் விளைநிலங்களில் வாழும் இப்பாம்புகள், எலிகளை வேட்டையாடுவதற்காகவே மனிதர்கள் வாழும் குடியிருப்புகளுக்குள் நுழைகின்றன. சூழலியலில் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி விவசாயத்திற்கு நன்மை செய்யும் இப்பாம்புகளைக் கண்டால், மக்கள் அவற்றைத் தாக்காமல் உடனடியாகப் பயிற்சி பெற்ற பாம்பு மீட்பாளர்கள் அல்லது வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
