CINEMA
படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த எதிர்பாரா விபத்து! ஒரு சீனுக்காக உயிரையே கொடுக்க தயாரா இருந்திருக்குறாரே?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அது இது எது” நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் சிவகார்த்திகேயன். அவர் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியபோதே அவருக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள். அதனை தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்க வந்த பிறகு அதிகளவில் ரசிகர்கள் குவிந்தனர்.
விஜய், அஜித் திரைப்படங்களுக்கு எந்தளவு வரவேற்பு கிடைக்குமோ அந்தளவுக்கு சிவகார்த்திகேயனின் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. அதன் பின் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஆகிப்போனார்.
தற்போது “அமரன்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடன இயக்குனர் தினேஷ், சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த ஒரு விபத்து குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இத்திரைப்படம் சிவகார்த்திகேயனின் கெரியரில் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊதா கலர் ரிப்பன்” என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
இந்த நிலையில் இப்பாடலில் சிவகார்த்திகேயன் தலைகீழாக தொங்கிக்கொண்டே மேலிருந்து கீழே வருவது போல் ஒரு காட்சி அமைந்திருந்ததாம். அந்த காட்சியில் ஒரு மரத்தின் கிளையின் மேல் கயிறை போட்டு அந்த கயிற்றின் நுனியில் சிவகார்த்திகேயனின் கால்களை கட்டி அவரை தலைகீழாக தொங்கவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கினார்களாம்.
முதல் ஷாட்டும் இரண்டாவது ஷாட்டும் சரியாக அமையாதபடியால் மூன்றாவது ஷாட் எடுக்கும்படியாக ஆனது. மூன்றாவது முறை அவரை தலைகீழாக தொங்கவிட்டு கீழே இழுத்தபோது எதிர்பாராவிதமாக கயிறு அறுந்து சிவகார்த்திகேயன் தலைகீழாக கீழே விழுந்துவிட்டாராம். நல்ல வேளையாக அவரது தலையை கீழே உள்ள டான்சர்கள் பிடித்துக்கொண்டதால் அவரது முதுகில் மட்டும் அடிபட்டதாம்.
அன்றைய நாள் படப்பிடிப்பை ரத்து செய்துவிடலாம் என்று படக்குழுவினர் கூற, ஆனால் சிவகார்த்திகேயனோ “இல்லை, நான் இந்த ஷாட்டில் மீண்டும் நடிக்கிறேன்” என்று கூறி மீண்டும் தலைகீழாக தொங்கி அந்த ஷாட்டை நிறைவு செய்தாராம். ஒரு பாடல் காட்சிக்காக இவ்வாறு தனது உயிரையே பணயம் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
![](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/05/tamilanmedia250logo.png)