தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.
நடிப்பின் பல்கலைக்கழகம் எனப் பெயர் வாங்கிய சிவாஜி கணேசனோடு நாகேஷ் போட்டி போட்டு நடித்த படம் என்றால் அது திருவிளையாடல் படம்தான். அந்த படத்தில் நாகேஷ் தருமி எனும் புலவராக நகைச்சுவை வேடத்தில் நடித்திருப்பார். மன்னர் அறிவித்த போட்டிக்கான பாடல் எழுத முடியாமல் புலம்பும் அவருக்கு சிவபெருமானே வந்து பாடலைக் கொடுத்து செல்வார்.
அந்த பாடலில் நக்கீரர் குற்றம் கண்டுபிடிக்க, அங்கே பயத்தில் அவர் பேசும் வசனங்களும், பின்னர் சிவபெருமானாகிய சிவாஜி கணேசனிடம் வந்து புலம்பும் காட்சியும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் காட்சி. அந்த காட்சியில் நடிக்கும் போதே சிவாஜியை விட நாகேஷ் சிறப்பாக நடித்துள்ளார் என பட்க்குழுவினர் பாராட்ட ஆரம்பித்தார்களாம்.
அதனால் இந்த காட்சியை சிவாஜி கட் செய்து குறைத்துவிடுவாரோ என நாகேஷ் பயந்துகொண்டே இருந்தாராம். ஆனால் சிவாஜி இயக்குனர் ஏ பி நாகராஜனை அழைத்து ‘இந்த காட்சியை அப்படியே வைக்க வேண்டும். நன்றாக வந்திருக்கிறது. ஒரு சிறு வசனத்தைக் கூட நீக்கக் கூடாது’ என சொல்லிவிட்டாராம். அதைக் கேட்ட பிறகுதான் நாகேஷுக்கு நிம்மதியாக இருந்ததாம்.
