தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் எதிரியை வீழ்த்துவதற்காகப் ‘போலி’யான ஒன்றைத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி இன்னும் வீரியத்துடன் களத்தில் நின்று மக்களுக்காகப் போராடும் என்று அவர் அந்தப் பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள கட்சி மக்களுக்கு நன்மைகள் செய்ய முன்வந்தால் அதை வரவேற்போம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தவறுகளைத் தொடர்ந்தால் இன்னும் இறங்கி அடிப்போம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற கட்சிகள் மத்தியில் நிலவும் இத்தகைய விமர்சனங்கள், வரவிருக்கும் அரசியல் களத்தில் பெரும் சவால்களை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.
