சோஷியல் மீடியா உலகில் 13 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டு பிரபலமான ராஜஸ்தானைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸர் திஜாரா வைன்ஸ் , அண்மையில் ஒரு மோசமான சம்பவத்தில் சிக்கியுள்ளார். ஹரித்வாரில் உள்ள ஒரு ஹேர் கிளினிக்கை விளம்பரப்படுத்துவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். வீடியோ படப்பிடிப்பிற்கு முன்பாக, “உங்கள் முடியில் ஒரு இழையைக் கூட வெட்ட மாட்டோம்” என்று உறுதியளித்த பிறகே அவர் அந்த விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால், படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே, அங்குள்ள ஊழியர் ஒருவர் திஜாரா வைன்ஸின் அனுமதியின்றி அவரது முடியை சடாரென வெட்டிவிட்டார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அவர், தற்போது மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அடுத்தடுத்து பல வீடியோக்கள் மற்றும் ஷூட்டிங்குகள் வரிசையாக இருக்கும் நிலையில், இந்த புதிய தலைமுடியால் எந்தவொரு படப்பிடிப்பையும் தொடர முடியாமல் அவரது முந்தைய கமிட்மென்ட்கள் அனைத்தும் பாதியிலேயே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த அநீதி குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை. “முடிதானே தம்பி, கொஞ்ச நாளில் மீண்டும் வளர்ந்துவிடும்” என்று காவல்துறையினர் இந்த விவகாரத்தை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அலட்சியப்படுத்தியுள்ளனர். தனக்கு நடந்த இந்த மோசடி மற்றும் அதனால் ஏற்பட்ட தொழில்முறை இழப்புகள் குறித்து யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் திஜாரா வைன்ஸ் தற்போது தவித்து வருகிறார்.
