தமிழக வெற்றிக் கழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், எதிர்பாராத சில சலசலப்புகள் அக்கட்சிக்குள் எழுந்துள்ளன. தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் விருப்பமனு அளித்தவர்கள், தற்போது களமிறங்குவதற்குத் தயக்கம் காட்டுவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. கட்சித் தலைமையுடன் நடைபெறும் நேர்காணலின் போது முன்வைக்கப்படும் சில நிபந்தனைகளே இந்தத் தயக்கத்திற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, வேட்பாளர் சீட் ஒதுக்கீட்டிற்காக முன்கூட்டியே ரூ. 1 கோடி வரை நிதியுதவி கோரப்படுவதாகவும், தேர்தல் செலவுகளுக்காகக் கூடுதலாக ரூ. 2 கோடி வரை செலவு செய்ய முடியுமா என வேட்பாளர்களிடம் உறுதிமொழி பெறப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் நிதி நெருக்கடி, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மற்றும் சாதாரணத் தொண்டர்களாக இருந்து விருப்பமனு அளித்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிதி நிலைப்பாட்டினால் அதிருப்தியடைந்துள்ள விருப்பமனு தாரர்கள், “ஏதேனும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால் பலம் கூடியிருக்கும், அப்போது கடன் பெற்றாவது தேர்தல் செலவுகளைச் சமாளித்திருப்போம்; ஆனால் இப்போது தனித்துக் களம் காணும் நிலையில், எந்த நம்பிக்கையில் இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவது?” எனப் புலம்பி வருவதாகத் தெரிகிறது. தவெக-வின் இந்தத் தேர்தல் வியூகம் மற்றும் நிதி சார்ந்த அணுகுமுறை, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
