கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணையாததற்கான காரணத்தை அக்கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி தற்போது ஓபனாக உடைத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தங்களுக்குத் தொகுதி எண்ணிக்கையை விட ஆட்சியில் பங்கேற்பதே முக்கியமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்காகத் தொகுதிப் பங்கீட்டில் விட்டுக்கொடுத்து, ஒரேயொரு அமைச்சர் பதவியைத் தான் கோரியதாகவும், ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கூட்டணி ஆட்சியில் துளியும் விருப்பம் இல்லாததால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் தான் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணையவில்லை என்று விளக்கமளித்துள்ள அவர், தமிழக வெற்றி கழகத்துடன் (தவெக) கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இறுதியில் தனித்து களம் காணும் முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். கிருஷ்ணசாமியின் இந்த அதிரடி வாக்குமூலம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
