தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், ஷாத்நகரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபரீத விளையாட்டு, வாலிபர் ஒருவரின் உயிரைப் பறித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பவன் (22) மற்றும் சாய் ஆகிய இருவரும் அங்குள்ள விஜய நேஹா தொழிற்சாலையின் பேக்கிங் பிரிவில் பணியாற்றி வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பவன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது நண்பரான சாய் அங்கிருந்த உயர் அழுத்தக் காற்றுக் குழாயை (High-pressure air hose) விளையாட்டாக பவனின் ஆசனவாயில் வைத்து இயக்கியுள்ளார். வெறும் இரண்டு வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த செயலால், உடல் உறுப்புகளுக்குள் காற்று மிக வேகமாகச் சென்று பவன் நிலைகுலைந்து விழுந்தார்.
பாதிக்கப்பட்ட பவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், ஆசனவாய் வழியாகச் சென்ற உயர் அழுத்தக் காற்று அவரது உட்புற உடல் உறுப்புகளைக் கடுமையாகச் சேதப்படுத்தியதால், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பவனின் சகோதரர் அமன் அளித்த புகாரின் பேரில், ஷாத்நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக பணியாளர்களிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாததும், ஆபத்தான இயந்திரங்களைக் கொண்டு விளையாடுவதும் இது போன்ற ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்குக் காரணமாக அமைவதாகக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
