கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதைக் கண்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட வடபொண்பரப்பி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அலெக்ஸ் பாண்டியனை போலீசார் சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு இல்லாத சூழலில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் ஒருவரிடம் வாலிபர் நள்ளிரவில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அவர் கைது செய்யப்பட்டதும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
